தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த பல்வேறு மாற்றங்களை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கடராமன் மாற்றப்பட்டு, அவரது பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ஏ. அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ. லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்ஷித் பொறுப்பேற்றுள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி. சரவண சுந்தருக்கு பதிலாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுமதித்துள்ள தேர்தல் ஆணையம், பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்தப் படையினரை தமிழகத்திற்கு அனுப்பி வருகிறது.
மார்ச் 30ஆம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதுடன், வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, சில இடங்களில் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் அளித்தார்.
மேலும், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து வேட்பாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபிக்கு அறிவுறுத்தினார். சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், விருதுநகர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் எஸ்பிக்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


