இந்தியாவின் வடமாநிலங்களில் சமீபகாலமாக அதிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சல், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அமைச்சர் ஒருவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால், கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாஜக கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சித் தலைவரும் மீன்வளத் துறை அமைச்சருமான சஞ்சய் நிஷாத், கான்பூர் தேஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பெண்களிடம், ”கங்கை நதி உங்கள் கால்களைச் சுத்தம் செய்ய உங்கள் வீட்டு வாசலின் படிகளை அடைகிறது. இது உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்” எனக் கூறியுள்ளார். இதில் அதிருப்தியடைந்த பெண்கள், ”கங்கையின் ஆசியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளனர். அவருடைய இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


