வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள திருமாவளவன், எந்த மாநிலத்தவராக இருந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் எந்த தொகுதியில் வசிக்கிறாரோ, அந்த தொகுதியில் தான் அவர் வாக்களிக்கத் தகுதி உடையவராக இருக்கிறார். அதன் அடிப்படையில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்றது. அதன்படி, பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள் பெயர் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதியில் வசிக்கிறார்களோ, அங்கு அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கணக்கின் படி பார்த்தால், சுமார் 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார்கள். இவர்களின் பெயர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். சென்னையில் மட்டும் 3.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் அதிகளவில் இருப்பார்கள். இதனால் வெளிமாநில வாக்காளர்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டால், அது தமிழ்நாட்டின் அரசியலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், பீகாரில் நடக்கும் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. ஆதார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைக் கோருகிறார்கள். கிட்டத்தட்ட சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் விதமாகத் தேர்தல் ஆணையம் இதை ஒரு சோதனை முரற்சியாகச் செய்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.


