திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஐடி பார்க்கில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கைகோல்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளயங்கிரி என்பவரது மகன் பொன்கார்த்திக் (24) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் அண்ணா நகர் பகுதி 1-ல்சக ஊழியர்கள் 4 பேருடன் சேர்ந்து தனிவீடாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். நேற்று அவருடன் இருந்த சக ஊழியர் இளையராஜா என்பவர் ஊருக்கு சென்று விட்டு திரும்பும்போது தனது பையை வைப்பதற்காக வீட்டு மாடிப் பகுதிக்கு சென்றுள்ளார். மாடியில் உள்ள அறையில் பொன் கார்த்திக்தூக்கு மாட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இறந்த பொன் கார்த்திக்கின் தந்தை நெசவுத் தொழில் செய்து வருவதாகவும் அவரது அண்ணன் மோகன் என்பவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் நவல்பட்டு போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மேல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.


